உதவி செய்ய யாருமில்லை.. நிர்க்கதியில் வேதாரண்யம்.. மனதை உருக்கும் காட்சிகள்!
வேதாரண்யம்: புயலால் பாதித்த பகுதிகளை சீரமைக்கவோ உதவி செய்யவோ ஒருவரும் வராத பல கிராமங்கள் நாகை மாவட்டத்தில் தத்தளித்துக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக நமது வாசகர் சுந்தர் பாண்டியன் மனதை உருக்கும் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
கஜா புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன காவிரி டெல்டா மாவட்டங்கள். குறிப்பாக நாகை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. பல ஊர்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் போய்ச் சேரவே இல்லை.
சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் பல கிராமங்கள் தவித்துக் கொண்டுள்ளன. குடிநீர் இல்லை, பால் இல்லை என்று மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்த நிலையில் நமது வாசகர் வி. சுந்தர் பாண்டியன் வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமங்களின் அவல நிலை குறித்த புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
உதவிக்கு ஆளே இல்லை
வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட புஷ்பவனம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாம். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாங்கள் மீண்டு வர 15 ஆண்டுகள் ஆகும் என்று இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தென்னை, மா, முந்திரி
இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை தீர்த்து வந்த தென்னை, மா, முந்தரி, சவுக்கு போன்ற பல லட்சம் மரங்களை இழந்து தவித்து வருகின்றனர் இப்பகுதி மக்கள். அந்த அளவுக்கு சேதத்தை சந்தித்துள்ளோம் என்று இப்பகுதி மக்களிடம் குமுறல் வெளிப்பட்டுள்ளது.
உடுத்தக் கூட உடையில்லாமல் அவதி
உண்ண உணவு, குடிக்க தண்ணீர், உடுத்த உடையின்றி மக்கள் தவித்து வருகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர். அரசு நிவாரணப் பணிகள் விரைந்து நடந்தால் மக்களுக்கு பயன் தரும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தவிப்பில் கிராமங்கள்
புஷ்பவனம் மட்டுமல்லாமல் வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, பெரியகுத்தகை என பல கிராமங்கள் புயல் தாக்குதலில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இங்கும் நிவாரணப் பணிகள் இதுவரை போகவில்லை.
மிகப் பெரிய சேதம்
அனைத்துக் கிராமங்களிலுமே மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பல ஊர்களில் வாழ்வாதாரத்தை மக்கள் இழந்துள்ளனர். தென்னந்தோப்புகள் கூட்டம் கூட்டமாக சீரழிந்துபோயுள்ளன. இதுதான் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதவிகள் விரைந்து தேவை
இந்தப் பகுதிகளுக்கு மிகப் பெரிய அளவில் உதவி தேவைப்படுகிறது. அதுவும் விரைவாக தேவைப்படுகிறது. அரசை மட்டும் நம்பியிருக்காமல் தன்னார்வத் தொண்டர்களும் பெருமளவில் களம் இறங்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்.