பக்தர்களின்றி வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு திருவிழா... வேளாங்கண்ணி பேராலயப் பெருவிழா..!
நாகை: உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தின் திருவிழா வரும் 29-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலம் திருவிழா நடைபெறும் 11 நாட்களும் மனித கடலாக காட்சியளிக்கும். அந்தளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அங்கு குவிவார்கள்.
இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா இந்தாண்டு நடைபெறவுள்ளது.
எனது அம்மா பள்ளியில் டீச்சர்... நான் நியூட்ரிஷியன் டீச்சர்... பிரியா ப்ரின்ஸ் ஓபன் டாக்..!
ஆரோக்கிய மாதா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமானது உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பேராலயம் பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலயத்தை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவ பெருமக்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என பல தரப்பட்டோரும் அங்கு சென்று வருவது வழக்கம். இதனால் மத நல்லிணக்கத்தின் அடையாளச் சின்னமாக வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது.
துயரம் நீங்கும்
இயேசுபிரானின் தாயான மரியன்னை தங்களுக்காக அவர் மகனிடத்தில் பரிந்துரைத்து துயர் துடைப்பார் என்பது கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. மன சஞ்சலங்களுடன், துயரங்களுடன், தீராத நோய்களுடன் அவதிப்படும் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தருவதாக வேண்டி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நடந்தே பாதயாத்திரையாகவும் வேளாங்கண்ணிக்கு செல்வார்கள்.
திருப்பலிகள்
திருவிழா நடைபெறும் 11 நாட்களும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கணி, தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். இதேபோல் வியாதிகளில் அவதிப்படுபவர்கள் குணம்பெற வேண்டி சிறப்பு வேண்டுதல் நிகழ்வும் நடத்தப்படும். கண்களில் கண்ணீர் கசிய உள்ளம் உருக ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பிரார்தனைகள் நடைபெறும். இதுமட்டுமல்லாமல் வேளாங்கண்ணி ஆலயத்தை நெருங்கிய பிறகு மணலில் முழங்காலிட்டு மாதாவை வழிபடச் செல்வார்கள் பக்தர்கள்.
வண்ண விளக்குகள்
திருவிழா நடைபெறும் 11 நாட்களும் வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிடப்படும். செப்டம்பர் 8-ம் தேதி மாதாவின் திருவுருவம் தாங்கிய தேர்பவனி முடிந்த பின்னர் திருவிழா நிறைவு பெறும். மரியே வாழ்க என்ற விண்ணை பிளக்கும் பக்தர்களின் முழக்கங்களுடன் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வந்த வேளாங்கண்ணி திருவிழா வரலாற்றில் முதல்முறையாக பக்தர்களின்றி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணிக்கு வெளி மாவட்டத்தினர் யாரும் வருகைத் தர மாவட்ட நிர்வாக அனுமதி மறுத்துள்ளது.
களை கட்டும் வியாபாரம்
ஆண்டுதோறும் மதுரை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி திருவிழாவை ஒட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் திருவிழா காலத்தில் வறிய நிலையில் உள்ள வியாபாரிகள் பலரின் வாழ்வாதாரம் மேம்படும். ஆனால் இந்தாண்டு எல்லாவற்றுக்கும் தடைபோட்டுவிட்டது கொரோனா. திருவிழா எனும் பெருவிழா இல்லாததால் வேளாங்கண்ணி நகரே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
18 இடங்களில்
இதனிடையே எச்சரிக்கையை மீறி வேளாங்கண்ணிக்குள் பிரவேசிக்க முயன்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டத்தினர் யாரும் வேளாங்கண்ணிக்குள் நுழையாத வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல்
கொரோனா நோயின் வீரியத்தை உணர்ந்து பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு வேளாங்கண்ணி பேராலயம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேராலயம் இணையதளம் மூலம் திருப்பலிகள் மற்றும் திருவிழா கால தினசரி நிகழ்வுகளை பொதுமக்கள் பார்ப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.