கொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா!
நாகை: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கமாக இன்று மாலை 5.45 மணிக்கு திருக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. கொடி ஊர்வலத்தின் நிறைவில், தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியைப் புனிதம் செய்வித்தார். இதையடுத்து, கொடியேற்றம் நடைபெற்றது.
ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் மற்றும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் அலங்காரத் தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
இதில், பங்கேற்க பலரும் பாத யாத்திரையாக வேளாங்கண்ணி வருபவர்கள்.
8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்றம் துவங்கியது முதல் ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். கொடியேற்றம், திருப்பலி, தேர் பவனியில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி, தஞ்சையில் இருந்து சிறப்பு டெமு ரயில் மற்றும் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.