அரசுக் கார், பயணப்படி வேண்டாம்.. அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் ஷாக் அன்ட் சபாஷ் மனு.. நாகையில் பரபரப்பு
நாகை: அரசுக் காரும் வேண்டாம், பயணப்படியும் வேண்டாம் என நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் மனு அளித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை காட்டிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் திமுக உறுப்பினர்களின் துணையுடன் அதிமுக மாவட்ட, ஒன்றிய அளவில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை அதிமுக அதிகமாக பிடித்தது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஒரு லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து 16 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுகவுக்கு 9 பேரும், திமுகவுக்கு 6 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
"எங்களை கைவிட்டுடாதீங்க" உருகிய விஷால்.. "எங்க விஷால் அண்ணன் படிக்க வெச்சாரு" நெகிழ்ந்த மாணவிகள்
ஒன்றியக் குழு தலைவர்
இதைத் தொடர்ந்து கடந்த 2-ஆம் தேதி மறைமுகத் தேர்தலில் திமுக உறுப்பினரின் ஆதரவுடன் 10 ஓட்டுகளை பெற்று அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தேவையில்லை
ஒன்றியக் குழு தலைவராக இவர் வெற்றி பெற்ற நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரிடம் ஒரு மனுவை அளித்தார். அதில் ஒன்றியக் குழு தலைவருக்கு அரசு வழங்கும் வாகனம், அதற்கான எரிப்பொருள் செலவு, வீட்டிற்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்பு, இன்ன பிற சலுகைகள் தேவையில்லை.
பயணப்படி வேண்டாம்
பயணப்படி, அமர்வுபடி தொகையை திட்டச்சேரியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு நேரடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.
மனைவி அரசு ஊழியர்
4 முறை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த போதிலும் முதல் முறையாக ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிப்படையான நிர்வாகம், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். மனைவி அரசு ஊழியராவார்.