"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
Recommended Video
நாகை: "சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... எங்க வீட்டுக்காரர் ஊருல இல்லை.." என்று 2 மகன்களுடன் தாய் நாகை கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள கோதண்டராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தென்கோவன். இவரது மனைவி வசந்தி. வசந்தகோவன், சாமுவேல் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
சில வருஷங்களுக்கு முன்பு, இவர்கள் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும், அதனால் வார வாரம் சர்ச்சுக்கு போய் வருவதாகவும் தெரிகிறது.
தொந்தரவு
ஆனால் இது கிராம மக்களுக்கு பிடிக்கவில்லை என்பதால், கிராம முக்கியஸ்தர்கள் சிலர் அந்த குடும்பத்தினரை அடிக்கடி திட்டி வந்துள்ளனர். இதனால் ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிடாமலும் ஒதுக்கி வைத்ததோடு, ஊரையும் காலி செய்ய சொல்லியும் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்கினார்கள்
இந்நிலையில் போன சனிக்கிழமை தென்கோவன் வெளியூர் சென்றார். அந்த சமயத்தில், அவரது வீட்டிற்கு கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர், வசந்தி மற்றும் 2 மகன்களை அசிங்கமாக பேசியதுடன், தாக்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து வசந்தி திட்டச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை போல் தெரிகிறது.
அவமானம்
இதனால் அவமானமும், மனவேதனையும் அடைந்த வசந்தி, மகன்களை கூப்பிட்டு கொண்டு இன்று காலை நாகை கலெக்டர் ஆபீஸ் வந்தார். தன் உடல் மீதும், பிள்ளைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார். இதை பார்த்து பதறிய அங்கிருந்த பாதுகாப்பு போலீசார், வசந்தி, குழந்தைகளை தடுத்து நிறுத்தினர்.
கேவலமா பேசறாங்க
அப்போது வசந்தி, "விடுங்க சார்.. என் வீட்டுக்காரர் ஊர்ல இல்லை.. எங்களை ஊருக்குள்ள எவ்ளோ கேவலமாக பேசறாங்க.. போலீசுல புகார் தந்தாலும் நடவடிக்கை இல்லை" என்று முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டே அழுது கதறினார். இதையடுத்து 3 பேர் மீதும் தண்ணீர் ஊற்றப்பட்டு, பின்னர் நாகூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.