தமிழக மீனவர்கள் 9 பேர் கைது... 2 படகுகள் பறிமுதல்... இலங்கை கடற்படை அட்டூழியம்
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை நீதிமன்றத்தால் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு உட்பட 6 நாகை மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்கள் நாடு திரும்பாத நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.