ஏ.. வேட்டி ஒழுங்கா இடுப்புலேயே இரேன்.. ஏன் இறங்குற.. யார்றா அங்க பேசுறது.. அடடே அமமுக!
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவில் நேற்று நடந்த அமமுமக பிரச்சாரத்தின்போது குடிகார தொண்டர்களால் பெண்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு விட்டதாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா திடலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
குமரியில் அமமுக செல்வாக்கு இல்லாமல் இருப்பதால் கூட்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட அமமுக வினர் இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வள்ளியூர், நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோரை டெம்போ, வேன் மூலமாக அழைத்து வந்து மைதானத்தை நிரப்பினர்.
இவர்களை அழைத்து வந்த வாகனங்கள் அனைத்தும் நகரின் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த முக்கிய சாலையான வடசேரி முதல் வேப்பமூடு வரையிலான சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 8 மணிக்கு தினகரன் பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 9 மணியை கடந்தும் தினகரன் வராததால் கூட்டத்திற்கு வந்த வெளிமாவட்ட பெண்கள் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனிடையே கூட்டத்திற்கு வந்திருந்த குடிமகன்கள் தங்கள் ஆடைகள் அவிழ்ந்தது கூட தெரியாமல் பெண்கள் கூட்டத்தினுள் புகுந்து ராகளையில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வெளியேற்றினாலும் சாலையில் கீழே விழுந்து தள்ளாடி தள்ளாடி சென்றது பொதுமக்களையும் பெண்களையும் முகம் சுளிக்க வைத்தது.
தொடர்ந்து 9. 30 மணிக்கு மேடைக்கு வந்த உடனேயே பேச ஆரம்பித்தார். குடிமகன்களின் அராஜகத்தை பார்த்த மைதானத்தில் இருந்த பெண்கள் உட்பட அனைவரும் சாரை சாரையாக மைதானத்தை விட்டு வெளியேறியதால் மைதானம் வெறிச்சோடியது. இதனால் கோபம் அடைந்த தினகரன் பெயரளவிற்கு சில வார்த்தைகளை பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அப்போது நிர்வாகிகள் பலர் சால்வை, பூங்கொத்து போன்றவற்றை கொடுக்க வந்தனர். ஏற்கனவே மைதானம் காலியானதால் கடும் கோபத்தில் இருந்த தினகரன் நிர்வாகிகள் கொடுத்த பரிசுகளை வாங்க மறுத்துவிட்டு வேட்பாளரையும் நிர்வாகிகளையும் சந்திக்காமல் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார்.