பள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு!
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை வைத்திருப்பதால் எப்போது பார்த்தாலும் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று பெண்கள் கொந்தளித்து போராட்டத்தில் குதித்தனர்.
தமிழகத்தில் எப்போது எந்தப் பிரச்சினைக்கு முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆதங்கத்திலுமே ஒவ்வொரு பொழுதும் விடிகின்றன. குறிப்பாக டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. விடிவுதான் கிடைக்கவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகூடங்கள் ஆகியவற்றிற்கு அருகில் புதிய டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நாகர்கோவில் கோட்டார் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கக் திட்டமிட்டு அதற்காக இன்று மது பாட்டில்கள் வாகனத்தில் கொண்டு வந்தனர்.
பள்ளிக்கூடம் செல்லும் பாதையில் அமைக்க பட இருந்த புதிய மதுபான கடைக்கு இன்று கொண்டு வந்த மது பாட்டில்களை இறக்க விடாமல் கடையை பெண்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்பதால் புதிய டாஸ்மாக் கடையை திறக்க விடமாட்டோம் என இப் பகுதி பெண்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பள்ளிக்கூடத்திற்கு அருகே கடை போட்டால் எப்படி பிள்ளைகள், பெண்கள் அப்பகுதியில் போய் வர முடியும். எனவே இதை ஏற்க முடியாது என்று கூறி பெண்கள் ஆவேசக் குரல் எழுப்பினர்.