புளிச்சமாவுக்கு இத்தனை அரசியலா? ஜெயமோகனைத் தாக்கியவரின் அண்ணன் பாஜக பிரமுகராம்!
நாகர்கோவில்: எழுத்தாளர் ஜெயமோகனை அடித்து உதைத்த மளிகை கடைக்காரரின் அண்ணன் பாஜக பிரமுகராம்... அவர்தான் போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் அழுத்தம் கொடுத்தார் என கவிஞர் லீனா மணிமேகலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புளித்த மாவு விவகாரத்தில் ஜெயமோகன் கடுமையாக தாக்கப்பட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மளிகை கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.
அவர் திமுக அடிப்படை உறுப்பினராக இருந்த போதும் திமுக நகர செயலாளர் மகேஷ் தம்மிடம் மன்னிப்பு கேட்டார் என ஜெயமோகன் தம்முடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் திமுகவை சேர்ந்தவர் செல்வம் என்பதை முன்வைத்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
தண்ணீர் பிரச்சினையையும் இதேபோல் தவிடுபொடியாக்குவாரா?.. பவுலிங்கில் அசத்திய அமைச்சர் வேலுமணி- வீடியோ
இந்நிலையில் கைது செய்யப்பட்ட செல்வத்தின் அண்ணன் பாஜக பிரமுகர் என்றும் அவருடைய அழுத்தத்தால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதித்தது என்றும் கவிஞர் லீனா மணிமேகலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக லீனா மணிமேகலை எழுதியுள்ளதாவது:
இவ்வளவு வெறுப்பும் காழ்ப்பும் வன்மமும் இருந்தால் சாகும்போது கட்டை வேகாது இலக்கிய நண்பர்களே. கருத்துகளில் வேறுபட்டாலும் எழுத்தாளர் என்பவரும் சக மனிதரே. நாளை நாமும், நம் குடும்பமும் கூட உடல்ரீதீயாக நியாயமற்று தாக்கப்படலாம். முடிந்தால் உதவியாய் ஆறுதலாய இருங்கள். இல்லை அமைதியாய் இருக்க முயற்சி செய்யுங்கள்.
நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிவாகி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. கவிஞர் லஷ்மி மணிவண்ணன், தயாளன் மற்றும் நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்.
குறிப்பு: தாக்குதல் நடத்தியவரின் அண்ணன் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பில் இருப்பதால், காவல் துறையை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கு கடும் பிரஷர் தரவேண்டியிருக்கிறது என்பது தான் நிலவரம். சூழ்நிலை புரியாமல் இந்துத்துவ எதிர்ப்பு கோஷங்களையும் நிலைத்தகவல்களையும் பதிவிடும் நண்பர்கள் அவர்களின் ஆற்றலை வேறொரு சமயத்திற்காக சேமித்து வைக்கலாம்.
இவ்வாறு லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.