நாகர்கோவில் பஸ் நிலையத்தில் 3 வயசுக் குழந்தையைக் கடத்திய பெண் சிக்கினார்
நாகர்கோவில்: நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாயமான 3 வயசு பெண் குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய ராஜி என்ற பெண்ணை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சந்தைவிளை பகுதியை சேர்ந்த பாசி, ஊசி விற்கும் சடையன் - தேவி தம்பதியின் மகள் வீரம்மா (வயது 3).
சடையனும், தேவியும் நாகர்கோவில் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு சடையன்- தேவி தம்பதியினர் தங்களின் மூன்று வயது மகள் வீரம்மாவுடன் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இரவு தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலையில் பார்த்த பொது மூன்று வயது குழந்தையை காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், குழந்தையை கடத்தி சென்றிருக்கலாம் என கருதி கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் தாயுடன் தூங்கிய போது காணாமல் போன 3 வயது குழந்தை வீரம்மாவை போலீசார் மீட்டனர். வள்ளியூரில் குழந்தையை கடத்தி வைத்திருந்த ராஜி என்ற பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.