எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவேன்... மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாகை: திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட எந்த அமைச்சராக இருந்தாலும் அவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் உள்பட அமைச்சர்களின் ஊழல்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்லி சிறைக்கு அனுப்பும் வேலையை உறுதியாக செய்வேன் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவுதின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் உரையில் இடம்பெற்ற ஆவேசமான வரிகளின் விவரம் பின்வருமாறு;
சுவர் ஏறி குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது
தற்காலிக வாபஸ்
''மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதல் இந்திய நாட்டு மக்களை மொழியால் - இனத்தால் - மதத்தால் பிளவு படுத்தக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.அவர்களுக்கு இந்தியும், சமஸ்கிருதமும் தான் இரு கண்களாக இருக்கின்றன. மற்ற மொழிகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவது கிடையாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததது முதல் இந்தியைத் திணிக்கும் முயற்சியில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாம் எதிர்ப்புத் தெரிவித்தால் உடனே தற்காலிகமாக வாபஸ் வாங்கிக் கொள்வார்கள்''.
இந்திவளர்ச்சி
''தமிழ்த்துறைக்கு என்று ஓர் அமைச்சர் இருக்கிறார். அவர் பாண்டியராஜன்; ஜோக்கர் போன்றவர். அவர் தேமுதிகவில் இருந்த போது சட்டமன்றத்தில் விஷயத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பேன். தற்போது அதிமுகவுக்கு சென்ற பிறகு, அவர் அமைச்சராகப் பொறுப்பு வகிப்பதோ தமிழ் வளர்ச்சித்துறைக்கு; ஆனால் இந்தி வளர்ச்சித் துறை, சமஸ்கிருத வளர்ச்சித் துறை அமைச்சரைப் போல அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்''.
டெண்டர்
''எடப்பாடிக்கு இருக்கும் ஒரே பற்று பணப்பற்று மட்டும் தான். காசு மட்டும் தான் கடவுள். காசுக்காக அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடிய ஒரு ஆட்சி எடப்பாடி ஆட்சி. நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சர் கையில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் விடுவதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சருக்கு வேண்டிய உறவினர்கள், பினாமிகள், அவர்களுக்கெல்லாம் திட்டமிட்டு பணி ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது''.
ஆளை காணோம்
''மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. கஜா புயல் தாக்கிய போது மக்களை வந்து பார்த்தாரா? ஆளைக் காணோம் - ஆளைக் காணோம் என்றதும் ஹெலிகாப்டரில் வந்து போனார். நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது வந்து பார்த்தாரா? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னாரா? விவசாயிகள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போய் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்திற்கு சென்று ஆறுதல் சொன்னாரா? நீட் தேர்வால் அரியலூரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அனிதா, அந்த பெண் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்களே அவர்கள் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் சொன்னாரா?''
பசப்பு வார்த்தை
''முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஒரு நாடகம். எதற்காக இந்த நாடகம். நானும் விவசாயி, விவசாயி என்ற பசப்பு வார்த்தையைத் தொடர்ந்து சொல்லி வருகிறார் எடப்பாடி. விவசாயி விவசாயி என்று தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘நான் விவசாயியாக இருந்து முதலமைச்சர் ஆகி உள்ளேன். அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை' என்கிறார். நீங்கள் எப்படி முதலமைச்சர் ஆனீர்கள் என தெரியாதா?'' இந்த லட்சணத்தில் திமுகவுக்கு சவால் விடுகிறார். தி.மு.க.-வைப் பற்றி பேச தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? தி.மு.க என்பது ஓர் பேரியக்கம். இப்போது எஃகு கோட்டையாக நிமிர்ந்து நிற்கிறது''.