மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடு ரோட்டில் பலியான மூதாட்டி.. நாகர்கோவிலில் பரபரப்பு சம்பவம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி எறியப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொத்தையடி பகுதியை சேர்ந்தவர் கங்காம்மாள் (65). நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்த கங்காம்மாள் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே அதி வேகமாக வந்த இருச்சக்க வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி கங்காம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த கோட்டார் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மூதாட்டி மீதி மோதியது மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அனிஷ் என்பதும் கொத்தனார் வேலை செய்யும் அனிஷ் வேலைக்கு செல்வதற்காக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றதும் அப்போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒரு பக்கம் மட்டும் பார்த்து விட்டு திடீரென சாலையை கடந்தால் விபத்து ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அனீஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து இருசக்கர வாகணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.