விதிமீறல் புகார்... மூடப்பட்டது போத்தீஸ் ஜவுளிக்கடை.. அதிகாரிகளுக்கு ஒரு சபாஷ்
நாகர்கோவில்:நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விதிகளை மீறி கட்டப்பட்ட போத்தீஸ் ஜவுளிக்கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
நாகர்கோலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரிலேயே ராமவீரபுரத்தில் பிரபல ஜவுளி நிறுவனமான போத்தீஸ் கடை திறக்கப்பட்டது. நாகர்கோவில் நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் 5 மாடி கட்டிக் கொள்ள வரைபட அனுமதியை பெற்றது.
ஆனால், விதியை மீறி 7 மாடி கட்டிடம் கட்டிக் கொண்டதாகவும், வாகன நிறுத்துமிடம் என்று அனுமதி பெற்ற இடத்தில் காய்கறி கடை அமைத்ததாகவும் புகார் எழுந்தது. போத்தீஸ் ஜவுளிக்கடையின் விதிமீறல்கள் எதிரொலியாக கூறப்படுகின்றது.
உள்ளூர் திட்ட குழுமம் முடிவு
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ந்தேதி, போத்தீஸ் ஜவுளிக் கடையை பூட்டி சீல்வைக்க உள்ளூர் திட்டகுழும அதிகாரி உத்தரவிட்டார். அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போத்தீஸ் நிறுவனம் இடைக்கால தடையாணை பெற்றதால் கடைக்கு சீல் வைக்கப்படவில்லை.
உறுதியானது விதிமீறல்
இந் நிலையில் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது போத்தீஸ் ஜவுளிக் கடையின் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதால், இடைக்கால தடை விலக்கி கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நாகர்கோவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று போத்தீஸ் ஜவுளிக்கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு கடையை பூட்டி சீல் வைத்தனர்.
நோட்டீஸ் ஒட்டப்பட்டது
சீல் வைத்ததற்காண காரணத்தை நோட்டீஸ் மூலம் சுவற்றிலும் அதிகாரிகள், ஒட்டிச் சென்றனர். மூடி முத்திரையிடப்பட்ட அந்த கடைக்கும் அதன் உள்ளே இருக்கின்ற பொருட்களுக்கும் போத்தீஸ் நிறுவன உரிமையாளரே பொறுப்பு என்று நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏமாற்றத்துடன் வாடிக்கையாளர்
இதே போல நாகர்கோவில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் விதியை மீறி கட்டப்பட்டிருந்த மேலும் 13 வணிக நிறுவனங்களுக்கும் உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகள் சீல் வைத்தனர். போத்தீஸ் ஜவுளிக்கடை பூட்டப்பட்டதை தொடர்ந்து அந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.