மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வரும் 28 ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டி உள்ள மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தற்போது மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்து ஃபனி புயலாக மாறவுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. அடுத்து புயல்தான்
இதையடுத்து கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முடுக்கி விட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் இருந்து, ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வரும் 28 ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வடநேரே தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அவசர உதவிக்கு 1077, 04652 231077, 04652 227460 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.