2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
Recommended Video
நாகர்கோவில்: வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல் விளை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜூலை 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிக்குள் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.
நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 இறங்கும். இதனால் புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், ஃபனி புயல் குறிப்பிட்ட பகுதியில் கரையை கடந்துள்ளது. இது போன்ற புயல் பாதிப்பு ஏற்படும் போது அதனை துல்லியமாக கணிக்க முடிந்ததால், உயிர் சேதம் உட்பட எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்க முடிந்தது.
திருப்பரங்குன்றம்.. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்: மதுரை கலெக்டர்
நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 108 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில், விண்வெளி ஆராய்ச்சி குறித்த சிறப்பு பயிற்சியை இஸ்ரோ வழங்க உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும். அடுத்த ஆண்டு முதல் பாதியில் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்படும். இதன் மூலம் சூரியன் குறித்து தெரியாத பல தகவல்கள் தெரியவரும்.
சந்திரன், சூரியன் உட்பட பல்வேறு கிரகங்களை ஆராயும் முயற்சியில் இஸ்ரோ இறங்கி உள்ளது. விண்ணிற்கு மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு திட்ட வடிவமைப்பு நிறைவு பெற்று உள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியா மனிதனை விண்ணிற்கு அனுப்பும் என தெரிவித்தார்.