ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை ஜெசிமோள் கைது
நாகர்கோவில்: குளச்சல் அருகே ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய புகாரில் டியூசன் ஆசிரியை போலீசார் கைது செய்தனர்.
பிரம்படி காயங்களுடன் ஐந்து வயது மதிக்கத்தக்க மாணவியின் புகைப்படம் ஒன்று நியாயம் கிடைக்கும் வரை பகிருங்கள் என்ற அடைமொழியுடன் நேற்று பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில் அந்த குழந்தை கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து. அந்தப் புகைப்படம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.,
பெத்தேல்புரத்தில் மாணவி படிக்கும் பள்ளியை கண்டறிந்த காவல்துறையினர் ஆசிரியரிடம் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது ஆசிரியர்கள் கூறுகையில், மாணவி படுவாக்கரையைச் சேர்ந்தவர் என்றும், கடந்த வெள்ளிக்கிழமை காலாண்டு தேர்வு எழுத வந்த மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்ததாகவும், பரிசோதித்துப் பார்த்ததில் மாணவியின் உடம்பில் காயங்கள் இருந்ததும் தங்களுக்கு தெரியவந்தது என்றனர்.
அதுகுறித்து மாணவியிடம் கேட்டதற்கு, டியூசன் ஆசிரியயை ஜெசிமோள் என்பவர் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி ஸ்டீல் அகப்பை மற்றும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாக கூறினார். இதையடுத்து, ஜெசிமோளை குளச்சல் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்,