கன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் வயது 42. இவர் நடமாடும் வண்டி வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஆவார்
இவர் மனைவி அருள் சுனிதா, 37. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்களுக்கு பிளஸ் டூ படிக்கும் ஒரு மகனும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மரிய டெல்லஸ், கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவி தாக்கினார். இது குறித்து அவர் அளித்த புகாரில் கைதான மரிய டெல்லஸ், 15 நாள்கள் சிறையில் இருந்து வெளி வந்தார்.
பின்னர், குடும்பத்தினர் சமரசம் பேசியதை அடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று வியாபாரம் முடித்து விட்டு வீடு சென்ற மரிய டெல்லஸ், குடிபோதையில் மனைவியை அடித்து கல்லால் தாக்கினார்.
இதில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்த அருள் சுனிதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., பாஸ்கரன், பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், விசாரித்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் மரிய டெல்லஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.