ஆழ்கடலில் தவறி விழுந்து இறந்த மீனவர்.. உடலை மீட்ட சக மீனவர்கள்.. குமரி அருகே பரபரப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த டிக்கோஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 8ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்கள் சென்றுள்ளனர்.
இவர்கள் ஆழ்கடலுக்கு சென்று கர்நாடக மாநில ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துவிட்டு 26ஆம் தியதி இரவு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது இரவில் திடீரென ஒரு சத்தம் கேட்டதாகவும் இதைக் கேட்ட ஒரு சில மீனவர்கள் விழித்து பார்த்தபோது தங்களுடன் வந்த சின்னத்துறை பகுதியை சேர்ந்த டேவிட் (56) என்ற மீனவரை காணவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர் படகில் இருந்த 8 மீனவர்களில் சிலர் கடலில் குதித்து காணாமல் போன மீனவரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் படகை ஓட்டி பார்த்தபோது தொலைவில் ஒருவர் கடலில் மிதப்பதை பார்த்து, கடலில் குதித்து மீனவர்கள் உடலை கைப்பற்றியபோது அது டேவிட் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் அவரது உடலுடன் சக மீனவர்கள் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்த்து விசைப்படகை ஓட்டி வந்து கரை சேர்த்தனர். மேலும் குளச்சல் கடலோர காவல்த்துறையினர் அவரது உடலை கைப்பற்றி, நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது, படகுகளில் மீனவர்களுக்கு நூதன முறையிலான இயற்கை உபாதிகள் கழிப்பதற்கான வசதிகள் இல்லாததே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என கூறினர். மத்திய, மாநில அரசுகள் படகுகளில் இயற்கை உபாதைகளுக்கான நூதன வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.