காதல் ஜோடியைப் பிரிக்க பார்க்கிறார்கள்.. அப்பா அம்மாவைக் கடத்தி விட்டனர்.. பரபர புகார்!
Recommended Video
நாகர்கோவில்: காதல் ஜோடியைப் பிரிக்க சிலர் முயல்வதாக நாகர்கோவில் கோர்ட்டில் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் மீது புகார் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதிய சேர்ந்தவர் அப்சல் ஜெனிஷ் (23). இவர் சென்னையில் தங்கி இருந்து பொறியியல் படித்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சுரேகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் இந்த காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் வந்து ஒரு தேவாலயத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் பெண் வீட்டை சேர்ந்த பலர் கன்னியாகுமரி மாவட்டம் வந்து காதலர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் காதலர் அப்சல் ஒரு வாட்ஸ் ஆப் செய்தியை தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு குழுக்களுக்கு அனுப்பினார். அதில், இயக்குனர் அமீர் தங்களுக்கு நெருக்கடி தருவதாகவும் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் அதில் கூறியிருந்தார். தனது உயிர் பறிபோனால் தனது மனைவிக்கு பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரணியல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்ற தங்கள் தாய் தந்தையை ஏராளமான வழக்கறிஞர்கள் வந்து போலீசாரின் துணையுடன் கடத்தி சென்று விட்டதாகவும் இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் தங்கள் தாய் தந்தையை கண்டு பிடித்து தர வேண்டும் என காதலனின் சகோதரி ஆக்சிலின் ஜெனிசா நாகர்கோவில் நீதிமன்றத்தை நாடி கோரிக்கை விடுத்து இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.