என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற திமுக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் உருக்கமாக உரையாற்றினார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வசந்தகுமார் போட்டியிடுகிறார்.
வசந்தகுமாரை, ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க, இடம் ஒதுக்காத செயலை மிகவும் உருக்கமாக குறிப்பிட்டார்.
உணர்வார்கள்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில், கிரிஜா வைத்தியநாதனுக்கு ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை
சித்திரவதை
ஸ்டாலின் பேசியதை பாருங்கள்: கருணாநிதியின் மரணத்தில் கூட சித்திரவதை செய்த கூட்டம்தான் எடப்பாடி பழனிச்சாமி கூட்டம். அண்ணாவுக்கு பக்கத்திலே ஒரு ஆறடி நிலத்தை தர மறுத்தது எடப்பாடி அரசு. அமைச்சர்கள் எல்லாம் கூடி பேசினார்களாம். ஒரு சிலர் தரலாம் என்றனராம். ஒரு சிலர் தரக்கூடாது என்று சொன்னார்களாம். அதில் முக்கியமாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில், நிலம் தரக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறினாராம். இந்த செய்திகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்தது.
6 அடி நிலம் கிடையாதா
நாம் ஆட்சிக்கு வந்தாலும் அவர் பொறுப்பில்தான் இருப்பார். பழிவாங்குவதற்காக சொல்லவில்லை. உணர்வார்கள். அண்ணாவுக்கு பக்கத்தில் இடம் கேட்டு கோரிக்கை விடுத்தோம். பெருந்தலைவர் காமராஜருக்கு, இடம் கொடுத்து அது உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. இந்திய தேசிய தலைவர்கள் பலருக்கும் மணிமண்டபம் அமைத்தவர் கருணாநிதி. கட்டபொம்மனுக்கு கோட்டை அமைத்தவர், கருணாநிதி. ஆனால் கருணாநிதிக்கு ஆறடி நிலம் கூட இல்லை என்று எடப்பாடி கூட்டம் சொல்லியது. ஆறு அடி நிலத்தை பெறுவதற்கு கருணாநிதிக்கு அருகதை கிடையாதா? 6 லட்சம் அடியை பெறுவதற்குக்கூட கருணாநிதிக்கு தகுதி உண்டு.
என்னுடைய அண்ணன் அழகிரி
வெட்கத்தை விட்டு சொல்கிறேன். நான், என்னுடைய அண்ணன் அழகிரி, என்னுடைய மைத்துனர் செல்வம், நம்முடைய பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, இப்படி ஒட்டுமொத்தமாக நாங்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்றோம். அப்போது சிலர் தடுத்தார்கள். எடப்பாடியை எல்லாம் நீங்கள் சந்திக்க கூடாது என்றனர். ஆனால் நான் கவுரவத்தை பார்க்கவில்லை. என்னுடைய மரியாதையை பார்க்கவில்லை. கருணாநிதியின் தன்மானத்தையும், அவருக்கு சேர வேண்டிய புகழ் சேர வேண்டும் என்பதையும்தான் பார்த்தேன்.
கடற்கரை செல்ல திட்டம்
பலமுறை வாதிட்டு பார்த்தும், எடப்பாடி பழனிச்சாமி கையைப்பிடித்து கெஞ்சியும், அவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரவில்லை. நீதிமன்றத்தின் மூலமாக தான் அந்த உரிமையை நாம் பெற்றோம். ஒருவேளை நீதிமன்றமும் மறுத்திருந்தால், உடலை கையில் எடுத்துக்கொண்டு, எந்த தடை வந்தாலும் கடற்கரைக்குச் செல்வது என்ற முடிவில் தான் நான் இருந்தேன். நல்லவேளை அந்த சூழ்நிலை வரவில்லை. கருணாநிதிக்கு, தமிழினத் தலைவருக்கு இடம் தராதவர்களுக்கு, பாடம் புகட்ட புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மிகப்பெரும் வெற்றியை நீங்கள் தரவேண்டும். 18 சட்டசபை இடைத்தேர்தலில், 18க்கும் 18 தொகுதிகளை வழங்க வேண்டும். இந்த வெற்றியின் மூலமாக அவர்களுக்கு நாம் ஆயுள் தண்டனை வழங்குவோம். இவ்வாறு ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.