அன்னம் வழங்க வேண்டியவரே 'கை' வைத்த கொடுமை.. உணவு தட்டோடு கலெக்டரிடம் மாணவிகள் கண்ணீர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு அன்னம் வழங்க வேண்டிய சமையல்காரரே அன்னத்தில் கைவைத்ததோடு, தரமற்ற உணவுகள் வழங்கி அவதூறாக பேசியதை அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் கையில் உணவை ஏந்தியவாறு நேரில் புகார் அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசால் நடத்தப்படும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக மாணவிகள் பலமுறை புகார் கூறியுள்ளனர்.
ஆனால் எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதுடன் விடுதியை விட்டே துரத்துவதாக விடுதி ஊழியர்கள் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் தங்களுக்கு காலை வழங்கப்பட்ட உணவுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது "கல்லூரியில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வழங்கப்படும் உணவுகள் மிகவும் தரக்குறைவாக இருக்கிறது. காய்கறி மற்றும் அரிசிகளை அங்கு வேலைபார்க்கும் ஊழியர்கள் வீடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள்.
உணவு குறித்து தாங்கள் புகார் கொடுக்க சென்றால் தங்களை கல்லூரியில் இருந்து வெளியேற்றி விடுவதாகவும் மிரட்டினார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அந்த விடுதி ஆனது எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இடிந்து விழும் சூழலில் காணப்படுகிறது. ஒருவித அச்சத்துடனேயே அங்கு தங்கி வருகிறோம்" இவ்வாறு கூறினர்.