வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை
மாயமான புதுமாப்பிள்ளையை தேடி போலீசார் சென்னை வந்துள்ளனர்
Recommended Video
நாகர்கோவில்: "வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்!
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் என்ஜினீயராக இருக்கிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார். இவருக்கு கல்யாணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அதே நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளையை பிடித்திருந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நேற்றுமுன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் நடக்க முடிவானது. கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு மணப்பெண்ணுக்கு மருதாணி வைக்கும் சடங்கு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. இதில் இரு குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
பிறகு எல்லோரும் தூங்க சென்றனர். ராத்திரி 11 மணி இருக்கும், மாப்பிள்ளைக்கு ஒரு போன் வந்தது. பேசிக் கொண்டே வந்த அவர், அங்கிருந்த தனது நண்பரிடம், "கொஞ்சம் பைக் தர்றியா.. வயிறு வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வந்திடறேன்" என்று சொல்லி வெளியே கிளம்பினார்.
பிள்ளைங்களா இதுங்க.. எத்தனை முறைதான் சொல்றது.. பஸ் கூரை மீது அட்டகாசம்.. 17 மாணவர்கள் கைது!
அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் மாப்பிள்ளையை காணோம்.. திரும்பி வரவே இல்லை. விடிஞ்சா கல்யாணம்.. இப்படி மகன் எங்கே போனார்னு தெரியாமல், அவரது பெற்றோர், எங்கெங்கோ தேடி அலைந்தனர். கடைசியில் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகிறார்கள்.
அவரது செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் இப்போதைக்கு சென்னையில் இருக்கிறார் என தெரியவந்துள்ளதாம். அதற்காக போலீசார், சென்னைக்கு தற்போது வந்துள்ளனர். ஏனெனில் மாப்பிள்ளைக்கு சென்னையில்தான் நிறைய ஃபிரண்ட்ஸ் இருக்கிறார்களாம். எதனால் மாயமானார், எங்கு இருக்கிறார், வேறு பெண்ணை இவர் விரும்புகிறாரா, என்பதெல்லாம் இனிமேல் தான் போலீசார் கண்டுபிடித்து விசாரித்து சொல்வார்கள்.