மும்மத தலங்களையும் இணைக்கும் ஒரு ரயில்.. நிறைவேறியது குமரியின் கனவு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மும்மத ஸ்தலங்களையும் இணைக்கும் வகையில் நாகர்கோவில் முதல் நெல்லை மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு நேற்று முதல் தனி ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் இயக்கப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இனிப்புகள் வழங்கி பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.
கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமான வேளாங்கண்ணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். அதன்படி பயணம் செய்யும் பயணிகள் நாகர்கோவிலில் இருந்து நெல்லை அல்லது மதுரை சென்று அங்கிருந்தே வேளாங்கண்ணி செல்லும் நிலை இருந்து வந்தது.
அதே போன்று தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்லவும் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததனர். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம், தஞ்சை, நாகூர், உள்ளிட்ட மும்மத ஸ்தலங்களுக்கு செல்லவும் ரயில் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையை மாற்றி திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களை இணைத்து வேளாங்கண்ணிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்தது வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கத்தை இணைக்கும் வகையில் வேளாங்கண்ணிக்கு தனி ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்து இருந்தது.
அதன் படி நேற்று முதன் முறையாக நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் இயக்கப்பட்டது, அதன் படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மாலை புறப்பட்ட இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர், மற்றும் பல்வேறு அமைப்பினர் இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த ரயில் தற்போது இயக்கப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்கள் இதனை குமரி மக்களுக்கு அளித்த ரயில்வே நிர்வாகதிற்கு நன்றி தெரிவித்தனர்.