பட்டாடை உடுத்தி.. சீர்வரிசை சுமந்து.. அரசுப் பள்ளியை நெகிழ வைத்த பெற்றோர்
Recommended Video
நாகர்கோவில்: தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை கொடுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர் வரிசையாக வழங்கினர்.
இதை ஊர்வலம் நடத்தி, பட்டாடை உடுத்தி மேள தாளங்களுடன் கல்யாண வீட்டு விசேஷம் போல பெற்றோர்கள் நடத்தியது அனைவரையும் கவர்ந்தது. அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கையை கூட்டுவதாக இது அமைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது கவிமணி தேசிக விநாயகம் அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளி. கவி புலவர் கவிமணி தேசிக விநாயகம் கல்வி பயின்று ஆசிரியராக பணியாற்றிய இப்பள்ளி கல்வியில் குமரிமாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக சாதனை படைத்து வருகிறது.
சீர்வரிசை
இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க தேவையான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீரவரிசையாக வழங்கினர். பீரோ, சேர், மின் விசிறி, பென்சில், லேப்டாப், இன்வெர்ட்டர், விளையாட்டு உபகரணங்கள், தண்ணீர் டேங்க், உள்ளிட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனர்.
ஆரத்தி எடுத்த ஆசிரியைகள்
சீர்வரிசை கொண்டு வந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்களை பள்ளியில் ஆசிரியைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறும் போது இன்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் கல்வியில் அரசு பள்ளிகள் முன்னேறி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிங்க
குறிப்பாக அரசு பள்ளிகளில் முதலில் ஒழுக்கம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நாட்டின் உயர் பதவிகள் வகித்த அப்துல் கலாம் போன்ற மாமனிதர்கள் அரசு பள்ளியில் படித்த உயர்ந்த நிலைக்கு வந்தனர். மெட்ரிக் பள்ளிகளை தேடும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு கல்வியில் சவால் விடும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.
நாமே பராமரிக்கலாம்
அரசு மட்டுமே பள்ளிகளை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் அரசு பள்ளிக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இன்று தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு தாயான நாங்கள் தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருட்களை அளித்து இருப்பதாக தெரிவித்தனர். பெண்கள் சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்தது திருமண வீட்டின் காட்சிகளை முன்னிறுத்தும் விதமாக அமைந்தது.