பள்ளிக்கூடத்துக்கு சீர்.. பட்டையை கிளப்பிய பெற்றோர்.. கன்னியாகுமரியில் கலக்கல்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி தூய அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி கற்கும் உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனிடையே மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள், இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள், திண்பண்டங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பங்குமக்கள் இணைந்து பள்ளிக்கு கல்வி சீர் வரிசையாக வழங்கினார்கள்.
முன்னதாக அனைத்து சீர் வரிசை பொருட்களை ஆலயத்தின் முன்பு இருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.