குமரி பரிவேட்டை.. பக்தர்கள் வெள்ளத்தில் பாணாசுர வதம்.. ஆயிரக்கணக்கானோர் கூடினர்
Recommended Video
நாகர்கோவில்: நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளின் அணிவகுப்புடன் கரகாட்டம், காவடி ஆட்டம், பொம்மலாட்டம், சிங்காரி மேளம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட ஊர்வலத்தில் வந்து பகவதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்த நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். ஆண்டுதோறும் இக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10-ம் திருவிழாவன்று பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்க்கான நவராத்திரி திருவிழா கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள், வாகன பவனி போன்றவை நடைபெற்றது. 10-ம் திருவிழாவான இன்று பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி பரிவேட்டை நிகழ்ச்சிக்காக மகாதானபுரம் நோக்கி நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளும் பக்தர்கள் முத்துக் குடை ஏந்தியும் சென்றனர்.
மேலும் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம் பொய்க்கால் குதிரை யாட்டம், பொம்மலாட்டம், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் போன்ற 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் விவேகானந்தபுரம் வழியாக மகதானபுரம் வந்தடைந்தது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை வில் -அம்பு கொண்டு வேட்டையாடி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு கழித்தனர்.