இது சூப்பரப்பு.. செயற்கை விபத்தை ஏற்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டிய போலீஸ்
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவிலில் 30வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை விபத்து நடப்பது போலவே செட் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய காவல்துறையின் செயல்பாடு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 30 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. வெறுமனே ஹெல்மெட் அணியுங்கள், வாகனங்களை சரியாக ஓட்டுங்கள், விதிகளை கடைப்பிடியுங்கள் என்று மைக் பிடித்து முழங்காமல் வித்தியாசமாக செயல்பட்டு காவல்துறையினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
30 ஆவது சாலை பாதுகாப்பு விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தியும், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் ஹெல்மட் அணியாமல் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுவது போன்ற செயற்கை காட்சிகள் ஏற்படுத்தி விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் வந்து மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வது போன்ற காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதன் மூலம் ஹெல்மெட் அணிந்து இருந்தால் உயிர் பிழைத்து இருக்கலாம் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அப்பகுதியினருக்கு ஏற்படுத்தப்பட்டது. செயற்கை என்று கூற முடியாத அளவுக்கு படு தத்ரூபமாக அமைந்த இந்த காட்சிகள் அந்த பகுதியில் உண்மையாகவே விபத்து ஏற்பட்டு விட்டதோ என்று பொதுமக்கள் உணரும் விதமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் சேவை துறையை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.