பாரத மாதா, மோடி, திமுக பற்றி சர்ச்சை பேச்சு.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளில் வழக்கு
நாகர்கோவில்: பாரத மாதா பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டும் வட்டார கிறிஸ்தவ இயக்கமும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா காலத்தில்.. நாட்டில் எவரையும் பிரதமர் மோடி பட்டினி போடவில்லை.. மன்சுக் மாண்ட்வியா பேச்சு!
திமுக பற்றியும் கருத்து
அந்த வீடியோவில் தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதாக காட்சிகள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டசபை உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்தும் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
எம்எல்ஏக்கள் கோவில்களுக்கு செல்ல எதிர்ப்பு
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்ற திமுக கூட்டணி எம்எல்ஏக்கள், இந்து கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். நாகர்கோவில் தொகுதியில் பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு பணம் கொடுத்துதான், கிறிஸ்தவ மதத்திலுள்ள, நாடார் ஜாதி ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றார் என்று பல சர்ச்சை கருத்துக்களை கூறியுள்ளார்.
மோடி, பாரத மாதா குறித்து சர்ச்சை பேச்சு
இத்தோடு விடவில்லை, ஜார்ஜ் பொன்னையா. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா குறித்தும் மோசமாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். இது அனைத்துக்கும் உச்சமாக பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துக்கள் கேட்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.
மத மோதல் என புகார்
இந்த வீடியோ வாட்ஸ்அப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்ததும், ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்துள்ளனர்.
7 பிரிவுகளில் வழக்கு
காவல்துறை நடவடிக்கை எடுக்க தாமதமாவதால், பல இடங்களில் போராட்டங்கள் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், பங்குத் தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல் , ஜாதி ,மதம் மற்றும் இரு தரப்பினர் இடையே விரோதத்தை உருவாக்குதல், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விளக்கம்
இந்த சம்பவம் குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னய்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாகவும், பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் இனிமேல் அதை திருத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.