கன்னியாகுமரியில் சபாஷ்! போலீஸ் ஸ்டேஷனில் மாணவனை தன் சேரில் அமர வைத்து.. இன்ஸ்பெக்டர் செய்த சம்பவம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணைக்கு வந்த மாணவரை அழைத்து, தனது இருக்கையில் அமரவைத்து காவல் ஆய்வாளர் அட்வைஸ் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சட்டங்கள், சோஷியல் மீடியாக்கள் மூலம் வெளியே வரும் கிரைம்கள், நவீன முறைகளில் மோசடி என காவல்துறைக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்துக்கொண்டே இருக்கிறது. தவிர வழக்குகளை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடி போன்ற காரணங்களால் காவல்துறையினர் எப்போதுமே இறுக்கமான முகத்துடன் காணப்படுகின்றனர். இந்த இறுக்கம் விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது அப்படியே பிரதிபலிக்கிறது. சில நேரங்களில் காவல்துறை மரணங்கள் வரை இது இட்டு சென்றுவிடுகிறது.

இப்படி எப்பவுமே டெரராகவே காவல்துறை இருப்பதாக சொல்லப்பட்டாலும், சில காவலர்கள் பிரச்னைகளை கூலாக கையாளுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசிந்தரம் காவல் நிலையத்திலும் இப்படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது குடும்ப பிரச்னை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் மீது சுசிந்திரம் காவல் ஆய்வாளர் ஆதாம் அலி, விசாரணையை மேற்கொண்டிருக்கிறார். விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் காவல் நிலையம் வந்திருக்கிறார்கள். அதில் பள்ளி மாணவர் ஒருவரும் இருந்திருக்கிறார்.
மாணவரிடம் கல்வி குறித்து விசாரித்த ஆய்வாளர் ஆதாம் அலி, நன்றாக படித்தால் என்னை விட பெரிய இடத்திற்கு செல்ல முடியும் என்று அட்வைஸ் செய்திருக்கிறார். மட்டுமல்லாது சேர்க்கை சரியில்லை எனில் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை எட்ட முடியாது என்றும், ஒழுக்கம் மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவரை தனது இருக்கையில் அமர வைத்த ஆய்வாளர், இனி அடிதடி பஞ்சாயத்துகளில் சிக்குபவர்களுடன் தான் சேரமாட்டேன் என்று எழுதி கொடுக்கவும் அன்புடன் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் மாணவர் மத்தியில் பெரும் மன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஆய்வாளரின் அட்வைஸால் மாணவரின் பெற்றோர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொதுவாக குடும்ப பிரச்னைகளில் சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்ய எதிர் தரப்பினர் அதிக மும்முரம் காட்டுகின்றனர். குடும்பத்தில் இரண்டு தரப்பில் உள்ள பெரியவர்களுக்கு இடையே உருவாக்கியுள்ள பிரச்னைக்கு சிறார்கள் பாவம் என்ன செய்வார்கள்? தன்னுடைய அப்பா, அம்மா, உடன் பிறந்தோர் நெருக்கடியை சந்திக்கும்போது சிறார்கள் சீக்கிரமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். அதில் சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடுகிறது. ஆனால் இதை பெற்றோர்கள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது.
அதே நேரம் சிறார்கள் மீது கடுமையாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கூடாது. பெரும்பாலான காவலர்கள் மனசாட்சியுடன் சிறார்களின் வாழ்க்கையை காப்பாற்றுகின்றனர். அதையேதான் சுசிந்திரம் காவல் ஆய்வாளர் ஆதாம் அலியும் செய்திருக்கிறார். சிறார் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கிறேன் என்று கறாராக நடந்துக்கொள்ளாமல், யாதார்த்தத்தை புரிய வைத்து மாணவரை தவறான வழிக்கு செல்லாமல் பாதுகாத்திருக்கிறார்.
போலீசாரின் இந்த செயலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?












Click it and Unblock the Notifications