நான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்
Recommended Video
நாகர்கோவில்: நான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொன்னேன் என்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழர்கள் நன்றி கெட்டவர்கள். தமிழின் தொன்மையை புகழ்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியை கொண்டாடாதவர்கள் தமிழர்கள் என்று கடுமையாக சாடியிருந்தார் பொன். ராதாகிருஷ்ணன். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.
தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் நபர்களை அரவணைக்க தயாராக இல்லாத, தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகளை நன்றி கெட்ட தமிழர்கள் என்று நான் கூறினேன். ஒட்டு மொத்த தமிழர்களை கூறவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு ரத்த தான முகாமை துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவும் நபர்களை அரவணைக்க தயாராக இல்லாத, தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகளைத்தான் நன்றி கெட்ட தமிழர்கள் என்று நான் கூறினேன். ஒட்டு மொத்த தமிழர்களை கூறவில்லை.
நீண்ட காலத்திற்கு பிறகு கமலஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அமித்ஷா கூறியதை முழுமையாக படித்திருந்தால் இந்த விமர்சன கருத்து வந்திருக்காது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.