கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்.. ஜெயக்குமாரை நேரில் பார்க்கும் போது.. பொன் ராதா காட்டம்
நாகர்கோவில்: கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன், நேரில் பார்க்கும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசுவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ;அமைச்சர் ஜெயக்குமார் என்னைப்பற்றி சில விஷயங்கள் பேசியிருக்கிறார். இவர்கள் எல்லாம் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சான்றிதழ் தர வேண்டியது இல்லை. எனது செயல்பாட்டை பற்றி முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா 2 முறை பேசி உள்ளார்.
கூட்டணி தர்மம் இருப்பதால் தான் அமைதியாக இருக்கிறேன். நேரில் பார்க்கும் போது அமைச்சர் ஜெயக்குமாருடன் சில விஷயங்கள் பேசுவேன்" இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வில்சன் கொலை வழக்கு தொடர்பாக இங்கு அனைத்து கட்சி கூட்டம் நடந்ததாக அறிந்தாக கூறி பொன் ராதா கிருஷ்ணன்,. அந்த கூட்டத்தில் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் இதுபற்றி பேச இங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார்.
குஜராத் முதலிடம்.. தமிழகம் இரண்டாமிடம்.. எதில் தெரியுமா..?
அடுத்த இலக்கு அவர்களாக மாறி விடுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது என்றும் உயிர் மேல் அச்சம் உள்ளவர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். ரஜினியை மையப்படுத்தினால்தான் அரசியல் செய்ய முடியும் என அனைத்து கட்சியினருக்கும் தெரியும் என்றும் இப்போது நடக்கும் பிரச்சினையில் ரஜினி எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும், அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு அவர் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.