எண்ட பார்வதி அம்மே... 20ம் தேதி முதல் வழிபாட்டுக் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
நாகர்கோவில்: பிரசித்திபெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 20-ம் தேதி முதல் வழிபாடு கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு பலவகையான வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கோவிலில் வழிபாட்டு கட்டணங்களாக அபிஷேகம் ரூ 250-ம், சந்தன காப்பு ரூ 100, கன்னியாபோஜனம் ரூ 150, புடவை சார்த்து ரூ 10, அரவணை ரூ 75 உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் வருகிற 20-ம் தேதி முதல் வழிபாடு கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இது பற்றிய தகவல் அறிவிப்பு ஒன்று கோவிலின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
அதன் படி புதிய கட்டணமாக அபிஷேகம் ரூ 500-ம், அஷ்டாபிஷேகம் ரூ 1500, சந்தன காப்பு ரூ 200, கன்னியாபோஜனம் ரூ 500, புடவை சார்த்து ரூ 50, அரவணை ரூ 200, பால் பாயசம் ரூ 100, சோறு கொடுப்பு ரூ 50, அஷ்டோத்திரம் ரூ 25 என வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கட்டண உயர்வு குறித்து ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வருகிற 20 தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு உள்ளது. இந்த கட்டண உயர்வு அறிவிப்பால் பொதுமக்கள் மற்றும் சுற்றலா பயணிகள் அதிர்ச்சியடைந்து மிகுந்த வேதனையில் உள்ளனர்.