கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்.. கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பு.. மாவட்ட ஆட்சியர் தகவல்
Recommended Video
நாகர்கோவில்: கேரளாவை நிபா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக கல்லூரி மாணவர், இளம்பெண் என இரண்டுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கூறும் போது, நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பை எதிர்கொள்ள மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளை கண்காணித்து வருகிறோம், மர்ம காய்ச்சல் அறிகுறியால் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த தனியார் மருத்துவமனைகளை அறிவுறுத்தி உள்ளோம்.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டு மிருகங்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனில், வெளவால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம். பழங்களை தோல் எடுத்தபிறகு சாப்பிட வேண்டும். கேரளா மாநில சுகாதாரத்துறையும் நிபா குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என தெரிவித்து உள்ளது எனவே மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தெரிவித்தார்.