குபுகுபுவென பற்றி எரிந்த ரூ. 20 லட்சம் வலைகள்.. மனசெல்லாம் வெறுத்துப் போன மீனவர்கள்
நாகர்கோவில்: கீழமணக்குடி மீனவ கிராமத்தில் மீனவர்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள 5 விதமான வலைகள் தீயில் எரிந்து முற்றிலும் மாயமாயின. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீன்பிடி கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் மீன்பிடித்தொழிலையே நம்பி உள்ளனர். இவர்கள் ஓய்வெடுக்கவும் வலைகளை பழுதுபார்க்கவும் கீழமணக்குடி கிராமத்தில் கடற்கரையோரமாக திறந்தவெளி ஓய்வுக்கூடம் உள்ளது.
இங்கு மீனவர்கள் தங்கள் வலைகளை பழுதுபார்த்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வீடுகளுக்கு சென்றுவிடுவர். இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், வாட்சன், ரூபன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமானரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வலைகளை இந்த தங்கும் கூடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இன்று காலை நிழற்கூடத்திற்கு வந்து பார்த்தபோது வலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்த்து எவ்வளவோ முயன்றும் அந்த வலைகளை அணைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் அங்கு வைத்திருந்த கனவா வலை,வாவல் வலை, எச்சா வலை,, கல்லிறால் வலை ஒத்தக்குண்டு வலை ஆகிய 5 விதமான வலைகள் எரிந்து நாசமாயின.
இது குறித்து அவர்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் இத்தகவலின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.