பிடித்தவருடன் வாழலாம் கோர்ட்டே சொல்லிருக்குனு சொன்ன மனைவி... கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்!
நாகர்கோவில் : பிடித்தவருடன் வாழலாம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருப்பதாக கூறிய மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கணவன் கொன்றுள்ளார். நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே மனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற கணவன் மணிகண்டன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மணிகண்டனின் நண்பர் ஜோதி அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தார். இதில் ஜோதிக்கும், மஞ்சுளாவிற்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
கணவருக்குத் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து பேசியும் வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்றுவிட்டனர். இதையறிந்த கணவர் மணிகண்டன் செங்கல் சூளையில் ஜோதியுடன் வேலை செய்து வந்த மனைவி மஞ்சுளாவை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
கணவரின் நண்பருடன் ஓட்டம்
எனினும் மணிகண்டனுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் மஞ்சுளா மீண்டும் ஜோதியுடன் ஆரல்வாய்மொழிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த மணிகண்டன் கடந்த 22ஆம் தேதி ஆரல்வாய்மொழியில் இருந்த மஞ்சுளாவையும், ஜோதியையும் அழைத்துக் கொண்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
கணவருடன் வாக்குவாதம்
மணிகண்டனுடன் வர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மஞ்சுளா, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிடித்தவருடன் சேர்ந்து வாழலாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மஞ்சுளாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மஞ்சுளாவை கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மஞ்சுளா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
மணிகண்டன் கைது
இதற்கிடையே கோட்டார் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஜோதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சீரழிந்த குடும்ப வாழ்க்கை
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம் தெரியாமல் மாற்றானோடு சென்றதை நியாயப்படுத்தும் விதமாக பேசியதால் கணவனாலேயே கொல்லப்பட்டுள்ளார் மஞ்சுளா. தவறான பழக்கத்தால் 2 பெண்பிள்ளைகளின் வாழ்க்கை நிராதவராகி இருப்பதோடு, 3 பேரின் வாழ்க்கையுமே சீரழிந்துள்ளது.