புளிச்ச மாவு விவகாரம்.. ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்ய கோருகிறது வணிகர் சங்கம்
Recommended Video
நாகர்கோவில்: தோசை மாவு விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார்
இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்து போயிருந்துள்ளது.
இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என ஜெயமோகன் கூறியுள்ளார். இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது கடைக்காரர் செல்வத்துடன் சேர்ந்து அங்கிருந்த சிலரும் எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயமோகன் வடசேரி காவல்நிலையத்தில் மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது புகார் அளித்துள்ளார்.
போலீசார் மளிகைக்கடைக்காரர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே புளித்த மாவு விவகாரம் தொடர்பாக கடைக்காரரும் தாக்கப்பட்டார் என்பதால், எழுத்தாளர் ஜெயமோகன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் எழுத்தாளர் ஜெயமோகன், கடைக்காரர் மற்றும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். மாவு புளித்திருப்பது என்பது இயற்கையான விஷயம். இதில் கொஞ்சம் கூட சகிப்பு தன்மை இல்லாமல், பெண் என்றும் பாராமல், அவர் செய்த விஷயங்கள் தான் பிரச்சனைக்கு காரணம். மேலும் ஜெயமோகன் தாக்கியதில் கடைக்காரர் செல்வமும் அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் அளித்த புகாருக்கு வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது தவறு. உடனடியாக ஜெயமோகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.