கழுவுங்க கழுவுங்க.. கை கழுவிக்கிட்டே இருங்க.. கொரோனாவை விரட்டும் வரை!
நாகர்கோவில்: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலமாக விடுத்த அழைப்பை ஏற்று இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்தி வெற்றி பெறவும் வைத்துள்ளனர்.
பிரதமர் நிலைமையின் வீரியம் உணர்ந்து தான் இந்த ஊரடங்கு விஷயத்தை கூறி இருக்கிறார். இந்தியா இந்த கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உலக நாடுகள் சீனா, இத்தாலி போன்ற நாடுகளை பார்த்து உஷாராக இருப்பது நிச்சயம் அவசியம் தான்.
இந்த கொரோனா தாக்கத்தையும் அதை நாம் சமாளிக்க வேண்டி இருக்கும் நிலைமையை முதல் உலக போர் இரண்டாம் உலகப் போரோடு ஒப்பிட்டு பேசி இருப்பது நிச்சயம் மக்களிடம் கொஞ்சம் நாம அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கும். எல்லாத்தையும் வந்தா பார்த்துக்கலாம் என்ற இந்தியர்களின் துணிவும் தைரியமும் இந்த வைரஸ் விஷயத்தை எளிதாக எடுத்து கொள்ள செய்து விட கூடாது .
அது சரி காலை ஏழு மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வர கூடாது என்று சொல்லி இருப்பதா ? ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளா? இது சாத்தியமா? என்னப்பா மோடி இப்படி சொல்லிட்டாரே ! என்று புலம்புவதா? இதை மக்கள் எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு தெளிவான முடிவு என்றே எடுத்து கொள்ள வேண்டும்.
வார நாட்களில் வேலைக்கு போகிற நம்மால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தான் பிரதமர் பொது மக்களிடம் கேட்டிருக்கிறார். அதனால் கடுப்பாகமல் மக்கள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வீட்டில் இருப்பது நல்லது தான். ஆனால் இது மாதிரி நிலைமை தொடருமா என்ற கேள்வி சாமானிய மனிதருக்குள் இல்லாமல் இல்லை..
கொரோனா என்ற குட்டி வைரஸ் நம்மை வீட்டுக்குள் முடக்கி விட்டதே என்று இப்போதைக்கு நினைக்காமல் இதுவும் ஒரு மாதிரி ஜாலியா தான் இருக்குல்ல என்று எடுத்துக்கொண்டு நம் நன்மைக்காக தான் என்று புரிந்து கொண்டு குடும்பம் குட்டி என்று ஒரு நாளை நல்லா செலவழிப்போம்.
அப்படியே சுத்தம் சோறு போடும் என்று முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்ததை ஞாபகப்படுத்திகொண்டு நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க.. சுத்தம் சுகாதாரமான பழக்கங்கள் ,ஆரோக்கியமான உணவு மூலம் மட்டுமே இப்போதைக்கு நாம தப்பிக்க முடியும் .. கழுவுங்க கழுவுங்க கை கழுவிகிட்டே இருங்க... வேற வழியே இல்லை!
- இங்க்பேனா