சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா கோலாகலம்
நாகர்கோவில்: சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தை தேரோட்ட விழா நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு, அதிகாலை 4 மணியளவில் முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு நடை திறப்பு, வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை மற்றும் பகல் 11 மணியளவில், அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைக்குளம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி. தமிழக பக்தர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியை தரிசிப்பதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவதுண்டு. இதனால் இத்தலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில், ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் நடைபெறும் தேரோட்ட திருவிழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டு வழக்கமாக தை மாதம் 11 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று காலையில் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது.
தலைமைப் பதியில் திருவிழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில், அய்யா வைகுண்டசாமிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதானம், வாகன பவனி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 8ஆம் நாளான்று அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து முத்திரிக் கிணற்றின் அருகில் கலி வேட்டையாடினார்.
9ஆம் நாளான கடந்த சனிக்கிழமையன்று அய்யா வைகுண்டசாமி அனுமன் வாகனத்திலும், 10ஆம் நாள் விழாவான ஞாயிறன்று, இந்திர வாகனத்திலும் பவனி வருதல் வைபவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ஆம் நாள் திருவிழாவான தேரோட்ட வைபவம் நேற்று நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் அய்யா வைகுண்டசாமி தேரில் எழுந்தருளினார்.
தேரோட்ட வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேலை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யா வைகுண்டசாமிக்கு வெற்றிலை பாக்கு, பழம், பன்னீர் ஆகியவற்றை சுருளாக வைத்து வழிபட்டனர். தேரோட்ட வைபவம் மாலை 6 மணியளவில் நிறைவடைந்து தேர் நிலைக்கு வந்தது.
இரவில் அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தெருவை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நள்ளிரவில் கொடியிறக்கம் நடைபெற்று பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.