163 வருடம் பழமையான நீராவி ரயில்.. நாகர்கோவில் டூ குமரி வரை இயக்க முடிவு.. மக்கள் உற்சாகம்!
நாகர்கோவிலில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ஹெரிடேஜ் இரயில் தற்போது நாகர்கோவில் இரயில் நிலைய சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருக்கிறது.
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ஹெரிடேஜ் இரயில் தற்போது நாகர்கோவில் இரயில் நிலைய சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்பட இருக்கிறது.
நாகர்கோவில் புராதன சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் ஹெரிடேஜ் இரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள இரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளது. தற்போது யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரயில் நாகர்கோவிலில் சோதனை ஓட்டத்தினை முடித்து தற்போது அதன் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பழமையான இரயில் நாகர்கோவில் இரயில் நிலைய சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி இடையே இயக்கபட உள்ளது.
இந்த இரயில் என்ஜின் இங்கிலாந்து நிறுவனமான கிட்சன் தாம்சன் கெலிட்சன் லீட்ஸ் என்னும் நிறுவனத்தால் 1855 ம் வருடம் தயாரிக்கப்பட்டது . தயாரிக்கப்பட்ட காலத்தில் மீட்டர் கேஜ் என்னும் சிறிய தண்டவாளத்தில் செல்லும் படி வடிவமைக்கப்பட்டு இயங்கி வந்த இந்த இரயில் என்ஜின் 2010 ம் வருடம் அப்போதைய மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்ட மதராஸ் பெரம்பூரில் உள்ள லோகோ ஒர்க்ஸ் இரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் பணிமனையில் பிராட் கேஜ் என்னும் அகல இரயில் தண்டவாளத்தில் செல்லும் படி மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள குளிர் சாதன வசதி பெட்டியில் சுமார் 46 பேர் பயணம் செய்யலாம்.40 கீ.மீ. வேகத்தில் செல்லும் இந்த இரயில் என்ஜின் 130 குதிரை திறன் சக்தியுடன் இயங்கும். எக்ஸ்பிரஸ் (EIR) இ.ஐ.ஆர் என்னும் பெயர் கொண்ட இந்த இரயில் என்ஜின் முழுக்க முழுக்க நிலக்கரியினால் இயங்கும்.
26 டன் எடை அளவு கொண்டது.3000 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்ட தொட்டி மூலம் ஏற்படுத்தப்படும் நீராவியில் இயங்கும் தன்மை வாய்ந்தது. புரதான சின்னமாக உள்ள இந்த இரயில் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களிடையே அதிகமான மற்றும் அமோகமான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களும், குழந்தைகளும் இந்த இரயிலில் பயணம் செல்ல வேண்டிய நாளை எதிர்பார்த்து மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறும் போது, வருகின்ற 7 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில நாட்கள் நாகர்கோவில் ஜங்ஷன் இரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி இரயில் நிலையம் வரை இயக்கபடுவதாகவும், பின்னர் குமரி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுறத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.