டியூசன் சென்ற மாணவன்.. இரும்பு வாளியால் புரட்டி எடுத்த டீச்சர்.. தலையில் 8 தையல்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே டியூசன் சென்ற 6 ம் வகுப்பு மாணவனுக்கு இரும்பு டப்பாவால் தலையில் அடி விழுந்துள்ளது. 8 தையலுடன் மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த தாக்குதல் தொடர்பாக டியூசன் டீச்சர் மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் மாஹின் அபுபக்கர். பெயிண்டிங் வேலை செய்துவரும் இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இரண்டாவது மகன் பாரிஸ் முகம்மது 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இருவரும் பள்ளிவிளை பகுதியில் சரண்யா என்பவர் வீட்டில் டியூசனுக்கு செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை டியூசனுக்கு சென்ற பாரிஸ் முகம்மது தலையில் ரத்தம் வழிந்த நிலையில் அவனது அண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதைக்கண்ட பெற்றோர் பதறியபடி விசாரித்துள்ளனர்.
ஒரு மாணவியின் நோட்டை எடுத்ததாக கூறி டியூசன் ஆசிரியை சரண்யா இரும்பு வாளியால் தாக்கியதில் பாரிஸ் முகமதுவின் தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மாஹின் அபுபக்கர் கொடுத்த புகாரின்பேரில் சரண்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சரண்யா மற்றும் தனது தாய் தந்தையுடன் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனின் பெற்றோர் இது குறித்து கூறும் போது, தனது மகனுக்கு நேர்ந்தது போல் வேறு எந்த குழந்தைக்கும் நேர்ந்து விடக்கூடாது எனவும், மகனின் இந்த வேதனையான நிலையை பார்த்து தினமும் வருந்தி வருவதாகவும் ,காவல்துறை வழக்கு பதிவு செய்ததோடு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.