நாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டை
Recommended Video
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பெட்டிகள் பாதுகாக்கப்பட்டு வரும் மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டன.
இது தொடர்பாக குடிபோதையில் மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட இருவரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் இங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஓய்வெடுக்க கல்லூரி வளாகத்தில் ஓய்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு ஓய்வெடுத்த காவலர் இருவருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது
இருவரும் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையில் திட்டி கொண்டு மோதலில் ஈடுபட்டதுடன், இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளனர். ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த இந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உடனடி விசாரணை மேற்கொண்டு, மோதலில் ஈடுபட்ட காவலர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
குடி போதையில் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணகுமார் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்து வரும் நிலையில், தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் போலீசாரிடையே ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.