நாகர்கோவில் ரயில் நிலையம்.. மதுரை, நெல்லைக்கு கூடுதல் ரயில் விட வேண்டும்.. பயணிகள் சங்கம் கோரிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலைய வருவாய் கடந்த நிதி ஆண்டைவிட 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை மார்க்கமாக அதிக ரயில்களை இயக்கினால் வருவாய் மேலும் கூடும் என்று குமரி மாவட்ட பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நாகர்கோவில் சந்திப்பு மிகமிக முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்பட்டும், வெளி ஊர்களில் இருந்து வந்து சேருவதாலும் இந்த ரயில் நிலையம் முனைய ரயில் நிலையமாக விளங்குகிறது.
நாகர்கோவில் சந்திப்பு திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள 103 ரயில் நிலையங்களின் கீழ் வருகிறது . இதில் வருவாய் அடிப்படையில் கோட்ட அளவில் 8-வது இடத்திலும், வருவாய் அடிப்படையில் என்எஸ்ஜி-3 பிரிவு ரயில் நிலையமாகவும் வரையறுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில் ரயில் நிலையம் வழியாக 29 ரயில்களும், நாகர்கோவிலிருந்து 21 ரயில்களும் புறப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த ரயில் நிலையம் மூலம் வரும் வருவாய் என்று பார்த்தால்,
- 2010-11 வருவாய் - 17 கோடி 99 லட்சங்கள்
- 2011-12 வருவாய் - 20 கோடி 17 லட்சங்கள்
- 2012-13 வருவாய் - 21 கோடி 91 லட்சங்கள்
- 2013-14 வருவாய் - 35 கோடி 67 லட்சங்கள்
- 2014-15 வருவாய் - 40 கோடி 38 லட்சங்கள்
- 2015-16 - வருவாய் -44 கோடி 02 லட்சங்கள்
- 2016-17 - வருவாய் -46 கோடி 43 லட்சங்கள்
- 2017-18 வருவாய் -50 கோடி 68 லட்சங்கள்
- 2018-19- வருவாய் -54 கோடி 88 லட்சங்கள்
- 2019-20- வருவாய் -65 கோடி 83 லட்சங்கள்
நாகர்கோவில் ரயில் நிலையத்தின் கடந்த 2018-19-ம் நிதிநிலை ஆண்டு வருவாய் 54,88,20,540 ஆகும். பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சியால் 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் நாகர்கோவிலிருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாள் ரயிலும், திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த அந்தோதையா ரயில் நாகர்கோவில் வரை 2019-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி முதல் நீட்டிப்பு செய்து இயக்கப்பட்டது.
இந்த இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டதும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் நாளுக்கு நாள் கணிசமான அளவில் உயரதொடங்கியது. இதிலும் முழுவதும் முன்பதிவு பெட்டிகளுடன் இயங்கும் அந்தோதையா ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தினசரி சராசரியாக 300 முதல் 400 பயணிகள் வரை நாகர்கோவிலிருந்து பயணம் செய்து வந்தனர். இதனால் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி : பலன் கருதாது கடமையை செய்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் - முதல்வர்
இதன்படி இந்த 2019-20 நிதி ஆண்டின் வருவாய் 65,83,33,551 ஆக உயர்ந்து நல்ல நிலைக்கு வந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 கோடிகள் வருவாய் அதிகரித்து உள்ளது அதாவது 2018-19-ம் ஆண்டைவிட 2019-20-ம் ஆண்டில் 20 சதமானம் அதிகம் ஆகும். 2011-ம் ஆண்டு நவம்பர் கன்னியாகுமரி - திருப்புகர் ரயிலும், 2012 கொல்லம் - நாகர்கோவில் மெமு ரயிலும், அதே ஆண்டு பரசுராம் ரயிலும் நாகர்கோவிலிருந்து கேரளா வழியாக இயக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில் வருவாய் ஒன்றும் பெரிதாக அதிகரிக்கவில்லை.
ஆனால் 2013-ம் ஆண்டு நாகர்கோவில் - பெங்களுர் தினசரி ரயில் இயக்கப்பட்டது. அடுத்த 2014-ம் ஆண்டு வருவாய் 25 சதமானம் அதிகரித்து உயர்ந்து உள்ளது. தற்போது சென்னைக்கு இயக்கபட்ட ரயிலாலும் வருவாய் 20 சதமானம் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வராமல் டவுண் ரயில் நிலையம் வழியாக திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருநெல்வேலி - ஜாம்நகர் வாரம் இருமுறை, திருநெல்வேலி - காந்திதாம் வாராந்திர ரயில், திருநெல்வேலி - பிலாஸ்பூர் ஆகிய ரயில்கள் இயங்கி வருகின்றன.
இந்த ரயில்கள் எல்லாம் நாகர்கோவில் சந்திப்பு வழியாக இயங்கியிருந்தால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் வருவாய் இன்னமும் அதிக அளவில் உயர்ந்திருக்கும்.
என்எஸ்ஜி
ரயில்வே வாரியம் ரயில் நிலைய வளர்ச்சி பணிகளுக்காக ரயில் நிலையங்களை பல்வேறு பிரிவுகளாக வகைபடுத்தியுள்ளது.
- என்எஸ்ஜி-1 - 500 கோடிக்கு மேல் வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்
- என்எஸ்ஜி-2 - 100 கோடி முதல் 500 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்
- என்எஸ்ஜி-3 - 20 கோடி முதல் 100 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்
- என்எஸ்ஜி-4 - 10 கோடி முதல் 20 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்
- என்எஸ்ஜி-5 - 1 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் உள்ள ரயில் நிலையங்கள்
- என்எஸ்ஜி-6 - 1 கோடி வரை உள்ள ரயில் நிலையங்கள்
வருவாயை 100 கோடிக்கு மேல் உயர்த்த கோரிக்கை:-
நாகர்கோவில் ரயில் நிலையத்தின் இந்த ஆண்டு வருவாயாக உள்ள 65 கோடியிலிருந்து அதன் வருவாயை 100 கோடிகளுக்கு மேல் உயர்த்தினால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி-3 லிருந்து என்எஸ்ஜி-2 ரயில் நிலையமாக மாற்றம் பெற்றுவிடும். இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் இன்னமும் அதிக அளவு வசதிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வேத்துறையால் செய்துதரப்படும்.
என்எஸ்ஜி-2 ரயில் நிலையமாக மாற்றங்கள்:-
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் என்எஸ்ஜி-3 லிருந்து என்எஸ்ஜி-2 ரயில் நிலையமாக மாறும் போது பல்வேறு புதிய வசதிகள் இங்கு செய்துதரப்படும்
1. பயணிகள் ஓய்வு அறை 125 சதுர மீட்டரிலிருந்து 250 சதுர மீட்டர்க்கு விரிவாக்கம் செய்யப்படும்.
2. நடைமேடை இருக்கைகள் 125லிருந்து 150ஆக உயர்த்தப்படும்
3. நடைமேடை மேற்கூரை நீளம் 400 சதுர மீட்டரிலிருந்து 500 சதுர மீட்டர்க்கு நீளம் கூட்டப்படும்.
4. சிறுநீர் கழிவறை 10லிருந்து 12 ஆக உயர்த்தப்படும்.
5. கழிவறை 10லிருந்து 12 ஆக உயர்த்தப்படும்.
6. குளிர்தண்ணீர் இயந்திரம் ஒரு நடைமேடைக்கு இரண்டு வீதம் வைக்கப்படும்
7. இணைய கணிணிமையம்
8. உயர்தர உணவு பிளாசா
9. பிரிபெய்ட் டாக்சி
10. இரண்டாவது நுழைவு வாயில்
11. குளிர்சாதன விஐபி உயர்தர ஓய்வுஅறை
இவ்வாறு இதன்பட்டியில் நீண்டுகொண்டே செல்கின்றது.
தமிழகம் மார்க்கம் கூடுதல் ரயில்கள் இயக்ககோரிக்கை:-
குமரி மாவட்டத்திலிருந்து பல்வேறு ரயில்கள் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி மார்க்கங்களில் இயக்கப்பட்டாலும் திருநெல்வேலி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களால் மட்டுமே அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. நாகர்கோவிலிருந்து சென்னைக்கு அறிமுகப்படுத்தி இயக்கப்பட்ட இரண்டு ரயில்களால நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் 20 சதமானம் அதிகரித்து உயர்ந்து உள்ளது. இவ்வாறு அதிகரித்ததை போன்று தமிழகம் மார்க்கமாக கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் இன்னமும் பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.
நாகர்கோவில் - சென்னை தினசரி சூப்பர்பாஸ்டு ரயில், திருவனந்தபுரம் - மங்களுர் ரயில் நீட்டிப்பு, நாகர்கோவில் - வேளாங்கண்ணி தினசரி ரயில், நாகர்கோவில் - கோவை பகல்நேர இன்டர்சிட்டி ரயில், கன்னியாகுமரி - மேட்டுபாளையம் இரவுநேர ரயில், கன்னியாகுமரி - புதுச்சேரி, கன்னியாகுமரி - புதுடில்லி, கன்னியாகுமரி - ஹவுரா, நாகர்கோவில் - காச்சுகுடா, கன்னியாகுமரி - ராமேஸ்வரம் ரயில்கள் தினசரி ரயில்களாக மாற்றம் செய்தது போலவே தமிழகம் மார்க்கம் பயணிக்கும் ரயில்கள் அதிகம் இயக்கப்பட்டால் நாகர்கோவில் ரயில் நிலையத்தின் வருவாய் சுமார் 100 கோடிகள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதிக வருவாய் தரும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்க கோரிக்கை:
தற்போது குமரி மாவட்டத்தலிருந்து தங்கள் மாநிலத்தின் தலைநகருக்கு தினசரி அதிக அளவில் ரயிலில் முன்பதிவு இருக்கை கிடைக்காத காரணத்தால் குளிர்சாதன தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் கொடுத்து பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில் இதுவரை இயக்கப்படவில்லை.
கேரளாவில் சென்னை, பெங்களுர், புதுடில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போன்று குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் நாகர்கோவிலிலிருந்து மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு தினசரி ரயிலும் நாகர்கோவிலிருந்து பெங்களுர்க்கு வாரவிடுமுறை நாட்களில் பயணிக்கும் வகையில் ரயிலும் இயக்கப்பட்டால் ரயில்வேத்துறைக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த வழித்தடங்களில் ரயில்கள் இயக்க ரயில்வேத்துறை முன்வர வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில்பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.