கந்துவட்டி.. கொடுக்க முடியாமல் தவித்த லட்சுமி.. கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாங்கிய கடனுக்கு இரு மடங்கு வட்டி கட்டிய பின்னரும் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதோடு தகாத வார்த்தைகளால் கந்து வட்டிக்காரர் திட்டியதால் மனமுடைந்த லெட்மி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். கல் உடைக்கும் தொழிலாளியான இவரது மனைவி லெட்சுமி.
இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவரிடம் இருந்து தனது குழந்தையின் மருத்துவ செலவுக்காக பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்றதாகவும் அதற்காக இது வரை 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வாங்கிய கடனுக்கு இருமடங்கு வட்டி கட்டி கட்டிய நிலையில் இனி வட்டி கொடுக்க மாட்டேன் என்றும் முதல் தொகையை ஒரு மாதத்தில் கொடுத்து விடுவதாகவும் வட்டிக்கு கொடுத்த மாதவனிடம் லெட்சுமி தெரிவித்துள்ளார். இதனை ஏற்று கொள்ளாத மாதவன் லட்சுமியின் வீட்டிற்கு சென்று கந்து வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த லட்சுமி வாங்கிய கடனுக்கு இரு மடங்கு வட்டி கட்டிய பின்னரும் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதோடு தகாத வார்த்தைகளால் திட்டிய கந்து வட்டிக்காரர் மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த லட்சுமி திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்னையை தலையில் விட்டு தீ குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் லட்சுமியின் கையில் இருந்த மண்ணெண்னை கேனை பறித்து அவரை மீட்டனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்து வந்த நிலையில் பெண் ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.