காவிரியாற்றில் மூழ்கி தம்பதி, குழந்தைகள் உள்பட 6 பேர் பலி.. நாமக்கல்லில் பெரும் சோகம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள காவிரியாற்றில் மூழ்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ளது பொத்தனூர் காவிரியாறு. வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க சரவணன், மனைவி ஜோதிமணி , இரட்டை குழந்தைகள் தீபேஷ் (12), தாரகேஷ்(12) ஆகியோர் காவிரியாற்றுக்கு சென்றனர். உடன் இவர்களது நண்பர் ஜோடர்பாளையத்தை சேர்ந்த தேவிஸ்ரீ, அவரது 6 வயது மகளும் சென்றிருந்தனர்.
ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி... 24 மணி நேரமும் கண்காணிப்பு
ஆற்றில் ஆழம்
அங்கு மேலும் சிலரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஆழமாக இருந்த பள்ளப்பகுதிக்கு தீபேஷும் தாரகேஷும் சென்றனர். இதனால் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டனர்.
அடுத்தடுத்து
அவர்களை காப்பாற்ற சரவணன் சென்றார், அவரும் அடித்துச் செல்லப்பட்டதால் ஜோதிமணி, அவரை காப்பாற்ற தனது குழந்தையுடன் தேவிஸ்ரீ என அடுத்தடுத்து காப்பாற்ற சென்றதால் அவர்கள் 6 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் சரவணன், ஜோதிமணி, மற்றொரு பெண் ஆகியோரை காலையில் சடலமாக மீட்டனர்.
6 பேரும் பலி
தேவிஸ்ரீயின் குழந்தை, தீபகேஷ், தாரகேஷ் ஆகியோரை தேடும் பணிகள் நடந்தன. இந்த நிலையில் அவர்களது உடல்களையும் தீயணைப்பு படையினர் மதிய வேளையில் மீட்டனர். எனவே இந்த சம்பவத்தில் 6 பேரும் பலியாகிவிட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சோகம்
ஜாலியாக பொழுதை கழிக்க வந்த இடத்தில் 6 பேர் பலியான சம்பவம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்தனூர் ஆற்றில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து பொறுப்பேற்க மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. தங்களது மாவட்ட எல்லைக்குள் விபத்து நிகழவில்லை என நாமக்கல், கரூர் ஆட்சியர்கள் மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.