அக்.,2ல் தயாராக இருங்க.. இது நமக்கான வெற்றி.. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தடை குறித்து திருமாவளவன் பரபர பேச்சு
நாமக்கல்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது நமக்கான வெற்றி. அக்டோபர் 2ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நிச்சயம் நடக்கும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் கூறினார்.
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 22ம் தேதி கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இது பாசிச சர்வாதிகாரமாம்..ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு..காயத்ரி ரகுராமுக்கு வந்ததே கோபம்!
அனுமதி மறுப்பு
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் இந்த சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே தான் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி பல மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் நாமக்கல் பூங்கா சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமகிரிப்பேட்டை இரவு காவலர் பரமசிவம் மர்ம சாவை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும், கல்குவாரிக்கு எதிராக கரூரில் செயல்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருமாவளவன் பேச்சு
மேலும் ஓமலூர் வட்டம் ஏனாத்தியில் அம்பேத்கர் சிலை இடிக்கப்பட்டதை கண்டித்தும், பெரிய மணியில் பள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொல் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நமக்கான வெற்றி
அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அறிவித்த நிலையில் இதையே காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் தடை விதித்திருப்பது நமக்கு கிடைத்த வெற்றி. இதுதொடர்பாக டிஜிபியை சந்தித்து முறையிட்டு சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டடத்துக்கு அனுமதி பெறுவோம். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்'' என்றார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.