இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் பாருங்கள்.. ஸ்டாலினை குறிப்பிட்டு எல் முருகன் பேச்சு
நாமக்கல்: நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் சாமி கும்பிட மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்றைக்கு அதே கிருத்திகை நாளில் ஸ்டாலின் கையில் வேல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பாருங்கள் என பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாஜக வைத்த கோரிக்கையை ஏற்றுத்தான் தமிழக அரசு தைபூசத்திற்கு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது என்றும் எல் முருகன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பா.ஜ.க. அணி பிரிவு மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகருமான டாக்டர் கே.பி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் திட்டங்கள்
இந்த நிகழ்சசியில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் முருகன் பேசுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெறுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
ஸ்டாலின் கையில் வேல்
பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்களது வேல் யாத்திரையை ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் குறை சொன்னார்கள். கேலி, கிண்டல் செய்தார்கள். நாங்கள் கோவிலுக்கு செல்ல மாட்டோம் சாமி கும்பிட மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்றைக்கு அதே கிருத்திகை நாளில் ஸ்டாலின் கையில் வேல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
விடுமுறை
தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டு அதன் மூலம் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்தது வரவேற்க கூடியது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிக எம்எல்ஏக்கள்
இந்து மத வழிபாட்டை தவறாக பேசியவர்களுக்கு வேல் யாத்திரை மூலம் உரிய பாடம் புகட்டப்பட்டது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வது உறுதி." இவ்வாறு பேசினார்.