இது சவால்யா.. சிக்கன் சாப்பிடுங்க.. கொரோனா வராது.. மீறி வந்தா ரூ. 1 கோடி.. வியாபாரிகள் பலே!
நாமக்கல்: சிக்கன், முட்டை சாப்பிடுங்கள், கொரோனா வரவே வராது. அப்படி மீறி வந்தா ரூ 1 கோடி பரிசாக தருகிறோம் என தமிழ்நாடு முட்டைக் கோழி பண்ணையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொரோனா அசைவ பிரியர்களையும் விட்டு வைக்கவில்லை.
சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் என யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள். இதனால் கோழிக் கறி விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது.
கடல் வாழ் உயிரினங்கள்
இதுகுறித்து மருத்துவர்கள் என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடையே உள்ள அச்சம் அகலவில்லை. இதனால் மக்கள் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை அதிகம் விரும்பி உண்கிறார்கள். தற்போது சிக்கன் கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அவர்களது வியாபாரம் பாதித்துள்ளதாக கவலை கொண்டுள்ளனர். மேலும் சிக்கன் கிலோ ஒன்றுக்கு ரூ 200-லிருந்து ரூ 100- ரூ 110-ஆக குறைத்துக் கொண்டுள்ளனர். எனினும் மக்கள் பெரும்பாலானோர் சிக்கனை நாடவில்லை.
விழிப்புணர்வு
இதையடுத்து மீன் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்துவிட்டது. ஆனால் கோழி, முட்டையின் விலை சரிந்துவிட்டது. இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோழி கடைக்காரர்கள் முயற்சித்து வருகிறார்கள். கறி விலைக் குறைப்பு, சிக்கன் 65 விலை குறைப்பு ஆகிய யுத்திகளை கையாண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு
சிக்கன் 65 விலை குறைப்பெல்லாம் குடிமகன்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஒரு கிலோ சிக்கன் 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிக்கன் 65 இலவசமாக வழங்கப்படுகிறது. என்னதான் விழிப்புணர்வு, இலவச ஆஃபர்கள் வழங்கினாலும் பலன் இல்லை. இதையடுத்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர் சம்மேளனத் தலைவர் ஒரு அதிரடி ஆஃபரை வழங்கியுள்ளனர்.
4 கோடி முட்டைகள் தேக்கம்
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் கோழிக் கறி, முட்டை சாப்பிட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசளிக்கிறோம். கொரோனா வைரஸ் பீதியால் விற்பனையாகாமல் நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுவிட்டதால் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. மேலும் கிலோ 90-க்கு விற்பட்ட சிக்கன் விலை தற்போது ரூ 50-ஆக குறைந்துவிட்டது. இப்படியே போனால் நாங்கள் எப்படி பிழைப்பது என கேள்வி விடுத்துள்ளார்.