ராசியான மாவட்டம் நாமக்கல்.. வடமாநிலங்கள் பாணியில் பிரம்மாண்ட ரோடு ஷோ.. முதல்வரின் முதல்நாள் பரப்புரை
நாமக்கல்: வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற முழக்கத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் வந்த அவருக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் தங்கமணி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.
அப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் தனக்கு ராசியான மாவட்டம் எனக் கூறி அதிமுகவின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
ஆஞ்சநேயர் கோயில்
நாமக்கல் நகருக்குள் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வடமாநில அரசியல் கட்சிகளின் பாணியில் பிரம்மாண்ட பேரணி நடத்தினார். இதேபோல் தான் கடந்த வாரம் நெல்லையிலும் நடத்தினார். இதனிடையே திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி இரட்டை இலை சின்னத்தை காட்டியவாறு சென்ற அவர் ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு செய்தார். அங்கு முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பிரச்சார செயல் திட்டம்
அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோழிப்பண்ணை அதிபர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். திமுகவுக்கு நமக்கு நாமே பிரச்சார செயல் திட்டத்தை வகுத்துக் கொடுத்த சுனில், அதே பாணியில் முதலமைச்சருக்கும் வித்தியாசமான முறையில் பரப்புரை செயல்திட்டம் வகுத்து கொடுத்திருக்கிறார்.
அதிமுக கோட்டை
இதனிடையே நாமக்கல் மாவட்ட எல்லையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 10 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராசியான மாவட்டம் நாமக்கல் என்றும் அதிமுகவின் எஃக்கு கோட்டை எனவும் கூறினார்.
முதல்வர் பரப்புரை
தனது முதல் பிரச்சார பாயிண்டிலேயே நேற்று ஸ்டாலின் விடுத்த அறிக்கைக்கு பதில் கொடுத்தார். அதிமுகவினரை கொண்டு பொங்கல் பரிசு டோக்கனை மக்களுக்கு வழங்கவில்லை என்றும் அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தடுத்து நிறுத்த முயல்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.