எங்களை பார்த்து... எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறாமைப்படுகிறார்கள் -ஓ.பி.எஸ்.
நாமக்கல்: அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் பொறாமைப்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற புதிய அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். மக்களை பற்றி திமுக உட்பட எந்த எதிர்க்கட்சிகளுக்கும் சிறிதும் அக்கறையில்லை என்றும், அதன் காரணமாகவே அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தும், விமர்சித்தும் வருவதாக ஓ.பி.எஸ். சாடினார். மேலும், அதிமுக அரசு மேற்கொள்ளும் நல்ல காரியங்களை எதிர்க்கட்சித் தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சி தனக்கு பின்னாலும் தொடரும் என ஜெயலலிதா கூறியதை போல் நடக்கும் என்றும், மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வர வேண்டும் என துடித்துக்கொண்டு இருப்பதாகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுதான் ஸ்டாலினுக்கு இருக்கிறதே தவிர மக்கள் நலனை பற்றி எந்த கவலையுமில்லை என சாடினார். மக்களை பற்றி திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், மக்களுக்காக அரசு செய்யும் நல்ல காரியங்களை விமர்சிக்கமாட்டார்கள் எனத் தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்கள் பார்த்து பார்த்து செயல்படுத்தப்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகள் தமிழக அரசை பற்றி பரப்பி வரும் பொய்களை மக்கள் நம்பத்தயாராக இல்லை என்றும், அவர்களின் பொய் பிரச்சாரம் வரும் தேர்தலில் எடுபடாது எனவும் ஓ.பி.எஸ். கூறினார்.