திமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி...! அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து
நாமக்கல் : கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் அந்தக் கட்சியின் எம்.பி.சின்ராஜ் கூட்டணிக்கு வேட்டு வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கொங்கு ஈஸ்வரனால் தோற்றுவிக்கப்பட்டு ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி. சுமார் 10 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெஸ்ட் ராமசாமியும், கொங்கு ஈஸ்வரனும் இணைந்து கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். பின்னர் காலப்போக்கில் பெஸ்ட் ராமசாமியோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அங்கிருந்து பிரிந்து தனிக்கட்சியை தொடங்கினார் கொங்கு ஈஸ்வரன்.
கொ.ம.தே.க.வுக்கு 1 சீட்
கடந்த 2014 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த கொங்கு ஈஸ்வரன் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் மகேந்திரனிடம் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கொங்கு ஈஸ்வரனுக்கு ஒரு சீட் கொடுத்து திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார் ஸ்டாலின்.
திமுக அதிருப்தி
நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி சார்பாக கோழிப்பண்ணை அதிபர் சின்ராஜை வேட்பாளராக நிறுத்தினார் ஈஸ்வரன். அப்போதே ஈஸ்வரன் மீது திமுக தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. ஈஸ்வரன் போட்டியிடுவார் என ஸ்டாலின் நினைத்த நிலையில், அறிமுகம் இல்லாத நபரை அவர் போட்டியிட வைத்தார். ஒரு வழியாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடும், துணையோடும் வெற்றி பெற்று சின்ராஜ் எம்.பி.யாகிவிட்டார்.
பொய் சொல்லிவிட்டு முதல்வர் ஏன் வெளிநாடு போகனும்...? மு.க.ஸ்டாலின் கேள்வி
மோதல்போக்கு
இந்நிலையில், ஆய்வு நடத்துகிறேன் எனக் கூறி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், இலவச தண்ணிர் பாசனத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இங்கு தான் பிரச்சனையே வெடிக்கிறது, நாமக்கல் மாவட்ட திமுகவினருடன் மோதல் போக்கை சின்ராஜ் எம்.பி. கடைபிடிப்பதாக அறிவாலயத்திற்கு தகவல் அனுப்பப்பட்டதாம். தேர்தலுடன் கூட்டணி முடிந்துவிட்டதாக சின்ராஜ் பேசிவருவதாகவும் திமுக நிர்வாகிகள் சொல்லியுள்ளார்கள்.
இதையடுத்து இது தொடர்பாக ஈஸ்வரன் தரப்பை தொடர்பு கொண்ட அறிவாலய நிர்வாகிகள் விவரத்தை விளக்கியுள்ளனர்.